Friday, December 21, 2012
துப்பாக்கி படத்தின் சர்ச்சைக்குரிய காட்சிகளில் எந்தெந்த காட்சியை நீக்கினீர்கள் என்று தமிழக அரசு விளக்க அறிக்கைத் தரவேண்டும் என்று சென்னை உயர் நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
துப்பாக்கி படம் வெளிவந்த அன்று, இஸ்லாமிய இளைஞர்களை தீவிரவாதிகள் போல சித்தரித்து வரும் காட்சிகளை படத்தில் இருந்து நீக்க வேண்டும் என்று இஸ்லாமிய அமைப்புக்கள் போர்கொடி உயர்த்தின.
அதோடு அந்த படத்தை வெளியிட தமிழக அரசு தடை விதிக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டு சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கும் தொடரப்பட்டது.
பின்னர் படத்தயாரிப்பாளர் சார்பில் சர்ச்சைக்குரிய காட்சிகளைப் படத்தில் இருந்து நீக்கி விட்டதாக கூறப்பட்டது.
அதன் பின்னர் படம் பிரச்சனையின்றி திரையரங்குகளில் ஓடிக் கொண்டிருந்தது.
இப்போது மறுபடியும் இந்திய முஸ்லீம்லீக் சேர்ந்த இப்ரஹீம் என்பவர், துப்பாக்கி படத்தில் சர்ச்சைக்குரிய காட்சிகளை நீக்கிவிட்டோம் என்று சொல்லி நீக்காமலேயே துப்பாக்கி படம் திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கிறது.
இஸ்லாமிய இளைஞர்களின் மனதை புண்படுத்தும் படியான இந்த படத்துக்கு கொடுக்கப் பட்ட யு தர சான்றிதழை தமிழக அரசு நிறுத்தி வைக்க வேண்டும் என்று சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்திருந்தார்.
இம்மனுவை விசாரித்த நீதிபதிகள் பானுமதி, சசிதரன் இருவரும் தமிழக அரசு சார்பாக வாதாடிய சட்டத்தரனியை விசாரித்தனர்.
அப்போது சட்டத்தரனி படத்தின் சர்ச்சைக்குரிய காட்சிகள் நீக்கப் பட்ட பின்னரே தமிழக அரசு திரையிட அனுமதி அளித்தது என்று கூறினார்.
இருப்பினும் படத்தில் எந்தெந்த காட்சிகள் நீக்கப் பட்டது என்பதற்கு விரிவான விளக்க அறிக்கையை ஜனவரி 3ம் திகதி சமர்ப்பிக்க வேண்டும் என்று நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர்.
இந்த வழக்கு மீண்டும் ஜனவரி 3ம் திகதி விசாரணைக்கு வரும் என்றும் தெரிகிறது.